
3 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “ஸ்ரீரங்கம் என இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாயகர் எனவும் தாயார் ரங்கநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது. “சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள்” என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய கோயில்களிலேயே மிக உயரமானதாக இருக்கும் இக்கோவிலின் கோபுரம் 1987 ஆம் ஆண்டு அனைவரின் முயற்சியாலும் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோவிலில் தான் திருவில்லிபபுத்தூரில் பிறந்து “கோதை” என்றழைக்கப்பட்ட அழ்வார்களில் ஒரே பெண்ணான “ஆண்டாள்” அரங்கனுள் ஐக்கியமானாள். இத்தகைய புகழ்பெற்ற கோவில் ஆகும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருச்சி திருவரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி கோவிலின் கிழக்கு நுழைவாயிலில் உள்ள தாமோதர கிருஷ்ணன் கோவில் கோபுரத்தின் ஒரு பகுதி (கொடுங்கை எனப்படும் வளைவுப் பகுதி) கடந்த 2023 – ம் ஆண்டு ஆகஸ்ட் 5 – ந் தேதி அன்று நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதையறிந்த அப்பகுதி பொது மக்கள், பக்தா்கள் கிழக்குவாசல் கோபுரத்தை உடனே சீரமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துவந்தனா்.
பழைமை மாறாமல் சிற்ப வல்லுநா்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் கொண்ட வல்லுநா்கள் குழுவின் வழிகாட்டுதலின் படி கடந்த திமுக ஆட்சியில் புனரமைப்புப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றது.
அதன் பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் இரண்டு முறை நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தினார். இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் வேகமாக நடைபெற்று தற்போது முழுவதுமாக பணிகள் நிறைவடைந்துள்ளது. முழுவதுமாக பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை காலை எட்டு மணிக்கு பூஜைகள் மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படுகிறது.
இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திறந்து வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது திறப்பு விழாவிற்கான இறுதிக்கட்ட பணிகளை கோவில் பணியாளர்கள் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

