ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வழங்கியதை ரத்து செய்ய அதிகாரிகள் உறுதி.தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நீலகண்டன் தகவல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆணையில் குளறுபடி; கல்வி அதிகாரியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு . போராட்டம் ஒத்திவைப்பு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நீலகண்டன் தகவல்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பணியமத்தியதை கண்டித்தும், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து கலெக்டர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரமேஷ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் மற்றும் பிரதிநிதிகளிடம் திருச்சியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 45 நிமிடங்கள் நடந்தன. இதில் பிரதான கோரிக்கையான 57 முதல் 60 வயது வரை உள்ள ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வழங்கியதை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும் கணக்கெடுப்பு செல்லும் ஆசிரியர்கள் தேவைக்கு ஏற்ப பதிவேட்டில் எழுதிவிட்டு தலைமை ஆசிரியர்களிடம் உரிய தகவல் அளித்துவிட்டு செல்லலாம் எனவும் கூறப்பட்டது. இதில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் வட்டார கல்வி அலுவலர்களிடம் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வாய்மொழியாக அளித்த உறுதியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொருளாளர் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, மாவட்ட தலைவர் கலியபெருமாள், பொருளாளர் சிவகுமார், பொறுப்பாளர்கள் பெர்ஜித் ராஜன், ஹக்கீம் அலி, ஜேம்ஸ், ஐசக் டேவிட் கமல் சேசுராஜ், சிராஜுதீன் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

