கரூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு 10 ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியருக்கு 43 ஆண்டு சிறை தண்டனையும் தாளாளருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கருர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்து உள்ளது.
கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்த பூஞ்சோலைப்புதூரைச் சோ்ந்த பள்ளி மாணவி கடந்த 2022-ஆம் ஆண்டு சேங்கலை அடுத்த பாப்பிரெட்டிபட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தாா்.
அப்போது அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் .

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த பாா்வதிபுரத்தைச் சோ்ந்த நிலவொளி (வயது 42) என்பவரும், அப்பள்ளியின் தாளாளரான திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆலம்பாடி சத்திரப்பட்டி காந்திநகரைச்சோ்ந்த யுவராஜ், (வயது 41) என்பவரும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனா்.
இதுதொடா்பாக மாணவி அளித்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தது,
பின்னா் இந்த வழக்கை குளித்தலை மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றினா். தொடா்ந்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
மேலும் இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை நேற்று வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி தங்கவேல் தமிழ் ஆசிரியா் நிலவொளிக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பள்ளித் தாளாளா் யுவராஜூக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 7 லட்சம் நிவாரணம் அளிக்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனா்.