தமிழக பா.ஜ.க. மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளராகவும், இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியனாகவும் திகழ்பவர் அலிஷா அப்துல்லா.
இவர் கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், பிரபல யூடியூபர்களான முக்தார் அகமது மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும், தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அலிஷா அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்த காலத்திலிருந்தே முக்தாரும், திருச்சி சூர்யாவும் தன்னைப்பற்றி தொடர்ந்து அவதூறான கருத்துக்களைப் பேசி வந்ததாகத் தெரிவித்தார். ஆரம்பத்தில் “குரைக்கும் நாய் கடிக்காது” என்ற பழமொழிக்கு ஏற்ப, இவர்களின் செயல்களைப் பொருட்படுத்தாமல் நாகரிகம் கருதி கடந்து சென்றதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கடந்த 12 நாட்களுக்கு முன்பு அவர்கள் வெளியிட்ட ஒரு வீடியோ தனது பொறுமையின் எல்லையை சோதிக்கும் வகையில் அமைந்திருந்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
அவர்கள் வெளியிட்ட வீடியோவில், தனக்குப் பிறந்த இரண்டு இரட்டை குழந்தைகள் குறித்து கூறி மிகவும் ஆபாசமாகவும் தரம் தாழ்ந்தும் பேசியுள்ளதாகக் குறிப்பிட்ட அலிஷா, ஒரு குழந்தையின் முகம் என்னுடைய முகம் போன்று இருப்பதாகவும் மற்றொரு குழந்தையின் முகத்தில் அண்ணாமலையின் முகம் இருப்பதைப் போலவும் புகைப்படங்களை சித்தரித்து பதிவிட்டுள்ளதாக கண்ணீருடன் விவரித்தார்.
இந்த விவகாரத்தை தான் சாதாரணமாக விடப்போவதில்லை என்றும், சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்காவிட்டால், தானே களத்தில் இறங்கி வேறு விதமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், முக்தார் சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்ததை சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய அவதூறு பரப்புபவர்களுக்கு பின்னணியில் யார் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தற்போதைய த.வெ.க. அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, முக்தார் மற்றும் திருச்சி சூர்யா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் சுமார் 10 நிமிடங்கள் விரிவாகப் பேசியதாகவும், அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் அலிஷா தெரிவித்தார்.
அலிஷா அப்துல்லாவின் இந்த கடுமையான புகாரைத் தொடர்ந்து, சென்னை காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது. இந்த அவதூறு வழக்கில் தொடர்புடைய திருச்சி சூர்யா சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த முதன்மை குற்றவாளியான யூடியூபர் முக்தார் அகமதுவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த தமிழக போலீசார், கர்நாடகாவில் வைத்து முக்தாரை அதிரடியாகக் கைது செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

