
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஜனநாயகன் கட் அவுட் வைப்பதற்காக அங்கிருந்த காமராஜர் பிறந்தநாள் விழா கட் அவுட்டை தவெகவினர் தூக்கி எறிந்தது குறித்து ப்ளூசட்டை மாறன் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொள்கை தலைவர் காமராஜர் பெயரில் நேற்று முன்தினம் காலை உணவு திட்டத்திற்கு பெயர் மாற்றம்.
நேற்று காமராஜருக்கு நேர்ந்த கதி. வாழ்க ஜனநாயகம். வளர்க ஜனநாயகன். இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.அத்துடன் ஒரு செய்தி சேனலின் வீடியோவையும் பகிர்ந்து ஜனநாயகன் பட பேனரை வைக்க தவெகவினர் காமராஜரின் பேனரை தூக்கி எறிந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகவிருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் வாங்காததால் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து சென்சாருக்காக கோர்ட், கேஸ் என அலைந்த நிலையில் தற்போது இந்தியாவில் 3000 தியேட்டர்களிலும் உலக அளவில் 8000 தியேட்டர்களிலும் வெளியாகிறது.
இந்த நிலையில் படம் ரிலீஸ் தேதி சொன்னதுமே விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும் ஆங்காங்கே பேனர் வைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அந்த வகையில் பொள்ளாச்சியில் அமைச்சர் விக்னேஷின் ஆதரவாளர்கள் ஜனநாயகன் பேனர் வைக்க தயார் செய்தனர்.
அப்போது ஏற்கெனவே அங்கிருந்த காமராஜர் பிறந்தநாள் விழா பேனரை எடுத்து தூக்கி எறிந்துவிட்டு ஜனநாயகன் பேனர் வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதை காங்கிரஸ் கட்சியினரும் நாடார் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை காமராஜர் காலை உணவுத் திட்டம் என தவெக அரசு புதன்கிழமை அன்று மாற்றம் செய்து உத்தரவிட்டது. திமுக ஆட்சியில் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது முதல்வரின் காலை உணவுத் திட்டம்! இதை தமிழக அரசு மாற்றி காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயரிட்டது.
இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: “பெருந்தலைவர் காமராஜர் பெயரை காலை உணவுத் திட்டத்துக்குச் சூட்டிய தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். படிக்க வைக்கும் கல்விக்கு பாடுபட்ட பெருந்தலைவருக்குச் செய்யும் நேற்றைய தினம் காமராஜர் உணவு திட்டம் என பெயரிட்ட நிலையில் இன்றோ காமராஜர் படத்தை தூக்கி எறிந்துவிட்டு ஜனநாயகன் பேனர் வைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் கொள்கை தலைவர்களில் காமராஜரும் ஒருவர் என்கிற போது அந்த போர்டை தூக்கி எறிந்துவிட்டு ஜனநாயகன் பட பேனரை வைத்தது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது முதல்வரோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக உள்ளது.
“காமராஜர் பிறந்தநாள் விழா முடிந்துவிட்டதால் அதை எடுப்பதில் என்ன தவறு? சில மீடியாக்கள் அரசியல் காழ்புணர்ச்சியால் இது போன்று சித்தரிக்கிறார்கள், நீங்களுமா?” என ப்ளூசட்டை மாறனை கேட்கிறார்கள். இப்படி இந்த பேனர் நீக்கத்திற்கு இரு மாதிரியான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

