பஞ்சப்பூர் புதிய காய்கறி மார்க்கெட் வடிவமைப்பு குறித்து முதல்வர் அடிக்கல் நாட்டுவதற்கு முன் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் போராட்டம். திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன்
திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமையும்
காய்கறி மார்க்கெட்
வடிவமைப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும் –
இல்லையேல் போராட்டம்.
காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு.
திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமைக்கப்படவுள்ள காய்கறி மார்க்கெட் வளாகம் அனைத்து வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் போராட்டம் மேற்கொள்ளப்படும் என திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்தார்.
இதில் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.கே.எம் காதர் மைதீன்,செயலாளர் என்.டி. கந்தன், பொருளாளர் ஜி.வெங்கடாசலம்,அவைத்தலைவர்கள் யு.எஸ்.கருப்பையா, ஜி.பால சுப்பிரமணி, ஒருங்கிணைப்பாளர் வி.என்.கண்ணதாசன், இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.டி முகமது சபி, ஆலோசகர்கள் ஏ.தங்கராஜ், டி.ஏ.எஸ்.கலிலுல் ரகுமான், எஸ்.பி பாபு, கே.ஆர்.ராஜா,
ஏ.எம்.பி.அப்துல் ஹக்கீம் மற்றும் துணைத் தலைவர்கள் துணைச் செயலாளர்கள் கமிட்டி உறுப்பினர்கள் என 150-க்கும் மேற்பட்ட கூட்டமைப்பை சேர்ந்த 26 வியாபார சங்கங்களின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம் காதர் மைதீன் தலைமையில் 26 சங்கங்களின் நிர்வாகிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் தங்களது தரப்பிலான கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களும் அளித்தனர்.
தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள காய்கறி மார்க்கெட் வளாக கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 – ந்தேதி அடிக்கல் நாட்டி வைக்கிறார். புதிய மார்க்கெட் வளாகம் அமைப்பது தொடர்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி, கலெக்டர் தலைமையில் நடைபெற்ற காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில், புதிதாக அமையவுள்ள மார்க்கெட் வளாக வடிவமைப்பு எந்த வகையிலும் சாத்தியமில்லாமல் இருந்தது. கடைகளின் பரப்பளவு, அடிப்படைத் தேவைகள், மற்றும் வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே அவற்றை மாற்றி அமைக்க வேண்டும் எனக்கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தோம்.
அப்போது மீண்டும் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி , பிறகு புதிய மார்க்கெட் வளாகம் அமைப்பது குறித்து இறுதி செய்து ஒழுங்குபடுத்தப்படும் என்று கலெக்டர் அறிவித்திருந்தார். ஆனால் இன்று வரை புதிய மார்க்கெட் வளாகம் அமைப்பது தொடர்பாக எங்களை அழைத்துப் பேசவில்லை. இந்நிலையில், மீண்டும் (நேற்று) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் அவை குறித்த விவரங்கள் தெரிவிக்கவில்லை. மாறாக 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் அழைத்து பேசுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து அனைத்து முடிவுகளும் எடுப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. எனவே இந்த விவகாரத்தில் சரியான தீர்வு கிடைக்கவில்லை.
தற்போது அமைக்கப்படவுள்ள காய்கறி மார்க்கெட் வளாகத்தில் 822 கடைகள் மட்டுமே கட்டப்படுகிறது. ஆனால் வியாபாரிகள் சுமார் 2500 வியாபாரிகள் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமில்லை. இதே போல வெங்காய மண்டி, வாழைக்காய் மண்டி, பழ மண்டிகளுக்கு என தனியாக இடங்கள் ஒதுக்கப்படவில்லை. புதிய மார்க்கெட் அமைக்க 23 ஏக்கர் ஒதுக்கப்பட்டாலும், 1 ஏக்கரில் மட்டுமே கடைகள் அமைப்பதாகவும் , மீதமுள்ளவை காலியிடங்களாகவே கிடக்கும் எனவும் கூறப்படுகிறது. அடிக்கல் நாட்டுவதற்கு முன்பே, புதிய மார்க்கெட் வளாக வடிவமைப்பு குறித்து தெளிவுப்படுத்த வேண்டும். இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றால் மட்டுமே தீர்வு கிடைக்கும். புதிய மார்க்கெட் அனைத்து வசதிகளுடனும், இட புழக்கத்துடனும் அமைக்கப்பட வேண்டும்.
எங்களது முதன்மையான கோரிக்கை பஞ்சப்பூர் பகுதியில் புதிய மார்க்கெட் கட்டும் முன்பு அனைத்து வியாபாரிகளை அழைத்து, கடைகளின் பரப்பளவு, தேவையான பிற வசதிகள், உள்கட்டமைப்பு குறித்து, முதல்வர் வருகைக்கு முன்பே எங்களை அழைத்து தெளிவுபடுத்த வேண்டும்.
இல்லையேல் அடுத்த கட்டடமாக போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.