திருச்சியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்றால் கடும் நடவடிக்கை.திருச்சி போலீஸ் கமிஷனர் சத்யபிரியா.
பார்களில்
சட்ட விரோதமாக மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திருச்சி போலீஸ் கமிஷனர் சத்யபிரியா எச்சரிக்கை.
திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இன்று மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் பகுதியில் காவல்துறையினரின் ரோந்து வாகனங்களில் செல்லும் காவல்துறையினருக்கு பாக்கெட் கேமரா வழங்கும் நிகழ்வு இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா தலைமை தாங்கி, ரோந்து காவலர்கள் 54 பேருக்கு பாக்கெட் கேமராக்கள் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது;-
இந்த பாக்கெட் கேமராக்கள் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ரோந்து காவலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வழக்கு தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்று அவர்கள் அதை விசாரிக்கும் போது முழுவதும் கேமராவில் பதிவாகிவிடும். பின்னர் விசாரணைக்கு அந்த பதிவுகள் நல்ல பயனை அளிக்கும். இந்த கேமராக்களின் மூலம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பதிவு செய்து கொள்ள முடியும். இது 64 ஜி.பி. மெமரி திறன் கொண்டது. அவ்வப்போது பேக்கப் எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. குறைந்தபட்சம் 5 மீட்டர் தொலைவில் நடைபெறுவதை துல்லியமாக பதிவு செய்து கொள்ளலாம்.
திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்களில் மதுபானம் விற்பவர்கள் மீதும் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது .எந்த புகார் வந்தாலும் உடனடியாக போலீசார் சென்று ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி மாநகரில் அனுமதி இல்லாத பார்கள் எதுவும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.