10 ஆண்டுகளாக வேறு பெண்ணுடன் வாழும் கணவனுக்காக அரசு வேலை.கரூரில் கதறி அழுத மகனை இழந்த தாய்
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
ஆனால், அந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த சிறுவனின் தாய்க்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த சனுஜ் வர்ஷனின் தாய் திருவளர்செல்வி, தன்னை அதிகாரிகள் அரங்கிற்குள் அனுமதிக்காமல் வெளியே நிறுத்திவிட்டதாக தெரிவித்தார். அதே நேரத்தில், கடந்த 10 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து வேறு பெண்ணுடன் வாழ்ந்து வரும் தனது கணவர் ரகுநாதனுக்கு அரசுப் பணி வழங்கும் வகையில் உள்ளே அமர வைத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.தகவலின்படி, கணவர் குடும்பத்தை விட்டு பிரிந்த பிறகு தனது தாயாரின் உதவியுடன் மகன் சனுஜ் வர்ஷனை வளர்த்து வந்ததாக திருவளர்செல்வி கூறினார். பின்னர் தனது சகோதரியுடன் சென்றிருந்த சனுஜ், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
விபத்துக்குப் பிறகு தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் தரப்பில் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் அனைத்தும் சட்டப்படி கிடைத்ததாக திருவளர்செல்வி கூறினார். ஆனால், ஒரு நாள் கூட மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்லாத, குழந்தையை கவனிக்காத தந்தைக்கு அரசுப் பணி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கேள்வி எழுப்பினார். தனக்கு ஆதரவாகப் பேச யாரும் இல்லாததால் அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் உடனடியாக நீதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .

