
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் மலைக்கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியதாக 2 பேர் மீது சில மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சுந்தரம் என்பவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இதே கிராமத்தில் வசித்து வருபவர் யுவராஜ் (வயது 26). இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இவரின் மீது சிறுமி வன்கொடுமை தொடர்பான புகார் எழவே, ஆதாரம் இல்லாததால் வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை. இதனிடையே, கல்லூரி மாணவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.
பின் யுவராஜ் மற்றும் குழந்தையின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு யுவராஜ் காரணம் என்பது, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தையை பெற்றெடுத்துள்ளதும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, யுவராஜின் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் என்பதும் தெரியவந்துள்ளது.

