தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானவை. 7 மணி நேர விசாரணைக்கு பின் முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழ் வழங்கவும் ௹.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் பி.டி.அரசகுமாரிடம் நடத்திய விசாரணையின் போது கிடைத்த ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயர் சேர்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, திருச்சி மற்றும் சென்னையில் உள்ள அவரது இல்லங்கள் உட்பட 9 இடங்களில் கடந்த 16-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டன.இந்தச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு அன்பில் மகேஷிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நேற்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரான அவரிடம், வழக்கின் ஆதாரங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காவல்துறை தயார் செய்து வைத்திருந்த 295 கேள்விகளில் 246 கேள்விகளைத் தன்னிடம் கேட்டதாகவும், அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தான் பொறுமையாகப் பதிலளித்ததாகத் தெரிவித்தார். மேலும், மீதமுள்ள கேள்விகளுக்காக அடுத்த வாரம் மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகி பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
தனது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கிய அவர், அவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற திறனாய்வுக் கூட்டங்கள் மற்றும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய அறிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் மட்டுமே என்றும், இந்த வழக்கிற்கும் அவற்றிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறினார். மேலும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானவை என்றும் அவர் தெரிவித்தார்.

