திருச்சி நீதிமன்றம் அருகே இன்று
மாநகராட்சி லாரி மோதி ஒருவர் பலி.
திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு லாரி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் பீமநகர் சாலையில் சென்று கொண்டிருந்தது.
நீதிமன்றம் வாசல், வ உ சி சிலை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரியின் சக்கரத்தில் சிக்கினார். அடுத்த நொடி லாரி டயர் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்தில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை.
இந்த விபத்து தொடர்பாக திருச்சி தெற்கு போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சம்பவத்தில் விபத்து ஏற்படுத்திய மாநகராட்சி லாரி டிரைவரை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இன்று மதியம் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.