கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்த ஐந்து பங்களாதேஷ் பெண்கள், போலி ஆவணங்களுடன் தங்கியிருந்ததாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்ணூர் நகர காவல்துறை நடத்திய சோதனையில், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, விசா அல்லது பிற முறையான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் சலினா அக்தர் என்ற பெண்ணை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்பாவில் போலீசார் கைது செய்தனர். அவரது செல்போனைச் சோதித்தபோது, பங்களாதேஷ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையின் புகைப்படம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், வாடகை வீட்டில் தங்கியிருந்த நஸ்மா, தஸ்லிமா, மொய்னா மற்றும் நஸ்ரின் ஆகிய மேலும் நான்கு பங்களாதேஷ் பெண்களும் கைதானார்கள்.கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் கண்ணூரில் உள்ள ஆயுஷ் ஸ்பாவில் மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். விசாரணையின் போது காவல்துறையை ஏமாற்றுவதற்காக அவர்கள் முதலில் பொய்யான முகவரிகளைக் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களின் செல்போன்களிலும் பங்களாதேஷ் அடையாள அட்டைகளின் புகைப்படங்கள் இருந்ததால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
இவர்களிடம் இருந்த அடையாள ஆவணங்கள் போலி என்பதும், அவை குவஹாத்தியில் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்தச் சதித் திட்டத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா, எல்லை தாண்டி இந்தியாவிற்குள் வர உதவி செய்தது யார் என்பது குறித்தும் போலி ஆவணங்கள் தயாரித்த கும்பல் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.சம்பந்தப்பட்ட ஸ்பா உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்து தங்கியதற்காகக் குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

