திருச்சி பீமநகர் செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு மற்றும் பாராட்டு விழா

திருச்சி செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளியில் முன்னாள் மாணவர் பாராட்டு விழா. திருச்சி பீமநகர் செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு மற்றும் பாராட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவரும் ஒன்டாரியோ மாகாண இணை அமைச்சருமான விஜய் தனிகாசலம் கௌரவிக்கப்பட்டார். உலகளவில் பரந்து விரிந்த மதிப்புமிக்க கல்வி அமைப்பின் ஓர் அங்கமான இப்பள்ளியில் படித்தது பெருமையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
செவன்த் டே பள்ளியின் முதல்வர் எட்வின் நேசஸ், தலைமையாசிரியர் ஜஸ்டின் ராஜேஷ், பொருளாளர் சாலமன் டேனியல், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய விஜய் தனிகாசலம் தனது தாய்ப்பள்ளிக்குத் திரும்பியிருப்பது நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அளிப்பதாகக் கூறினார். பள்ளியில் கற்ற பாடங்கள் புத்தகங்களுக்கும், தேர்வுகளுக்கும் அப்பாற்பட்டு, ஒழுக்கம், பொறுப்புணர்வு, நட்ட தன்னம்பிக்கை மற்றும் பிறரை மதிக்கும் பண்புகளை வளர்த்ததாகத் தெரிவித்தார்.
உலகளவில் சிறப்பாகச் செயல்படும் செவன்த் டே அட்வென்டிஸ்ட் கல்வி அமைப்புடன் இணைந்த இப்பள்ளியில் கல்வி பயின்றது தனக்கு மிகுந்த பெருமையும் கௌரவமும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். கல்வியுடன் நற்பண்பு, சேவை மனப்பான்மை, ஒழுக்கம் மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு செவன்த் டே பள்ளி முக்கியத்துவம் அளித்து வருவதைப் பாராட்டினார்.
1963-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மாணவர்களுக்குக் கல்விச் சேவை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார். மாணவர்கள் ஆசிரியர்களை மதித்து கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி, ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் முன்னேற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். விழாவின் நிறைவில் விஜய் தனிகாசலத்துக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

