ஓன்று முதல் 3ஆம் வகுப்பு வரை ஜூன் 4ஆம் தேதியும், பிற வகுப்புகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று(18.05.2026) அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர். சந்தரமோகன் மற்றும் கல்வி உயர் அலுவலர்களோடு பள்ளிக்கல்வித் துறை சார்பான நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வு கூட்டத்தில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது பாட நூல்களை வெளியிட்டார்.
மாணவர்கள் எளிதில் புரிந்து கற்று தனித்திறன் மிக்கவர்களாக உருவாகும் வகையிலும், மாணவர்களிடம் எதிர்நோக்கப்படும் கற்றல் விளைவுகளை அடையும் வகையிலும் இப்பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைமைய கற்றல் அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகள் மிகவும் விரும்பும் கதைகள், பாடல்கள், கற்றல் செயல்பாடுகள் மூலம் கற்கும் வகையிலும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாணவர்களது உடல் இயக்க திறன்கள் (Motor skills), சமூக மனவெழுச்சித் திறன்கள், விழுமியங்கள், வாழ்க்கை திறன்களை உள்ளடக்கிய பாடப்பொருட்களோடு அழகிய வண்ண வடிவமைப்புடன் இப்பாட நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
2026 – 27 கல்வி ஆண்டில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப்பின் 1.06.2026 திங்கள் கிழமையன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார்.
பள்ளி திறக்கப்படும் நாளன்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் வகையில், தேவையான பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்ப்பட்டு தயார்நிலையில் வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
இக்கல்வியாண்டில் புதிய பாட புத்தகங்கள் அறிமுகப்படுத்தும் நிலையில், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள் சார்ந்த பயிற்சி 01.06.2026 முதல் 03.06.2026 வரை நடைபெறும் எனவும் அறிவித்தார்.
பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் திறக்கப்படவுள்ள நிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்.
2026-27ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்டங்கள் (பாடபுத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடை, புத்தக பைகள்) மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி திறக்கும் நாளன்று கிடைத்திட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
பள்ளிகளில் உள்ள திறன் பலகைகள் (Smart Board) மற்றும் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Lab) மாணவர் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உரிய இணைய வசதியுடன் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறைகள், குடிநீர் தேக்கத் தொட்டி மற்றும் கை கழுவும் இடம் ஆகியவை தூய்மையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.
பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறைகளிலோ தேவையற்ற/ பயன்பாடற்ற பொருட்கள் இருப்பின் அவற்றினை அப்புறப்படுத்த வேண்டும். மாணவர்கள் பயன்பாட்டிற்கான குடிநீர்த் தொட்டியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கழிப்பறைகள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தண்ணீர் வசதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் (Septic Tanks), கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் (Borewell) பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் இல்லாதவாறு மூடியிட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.
தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு EMIS வழியாக உடனடியாக மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
2025-26ஆம் கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு நிறைவு செய்யும் மாணவர்கள் அருகில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி / உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளிகளில் முறையே ஆறாம் வகுப்பு / ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்படுவதை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும். பள்ளி வளாகத்தில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடல் வேண்டும்.
மேற்காண்ட அறிவுரைகளை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் பின்பற்றுமாறு தெரிவித்தார். மேலும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள்/ மாவட்டக் கல்வி அலுவலர்கள் / மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் இதனை கண்காணிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.

