திருச்சி சுப்ரமணியபுரத்தில் கைது செய்யப்பட்ட 6 நபர்களுக்கும் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு.? என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை
திருச்சியில் சட்டவிரோதப் பணம் பரிமாற்ற விவகாரத்தில் ரூ.14.40 லட்சம் பணத்துடன் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் சர்வதேச ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருப்பதால், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
என்ஐஏ அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கே.கே.நகர் போலீஸார் ஜூன் 4-ம் தேதி சோதனை நடத்தினர். இதில், ரூ.14.40 லட்சம் பணம், 150-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள், 50 செல்போன்கள், சிம் கார்டுகள் இருந்தன.

இதுதொடர்பாக, வீட்டில் தங்கியிருந்த 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து, ராமநாதபுரம் தமீம்அன்சாரி, உத்திரகோசமங்கை அஜ்மீர் அலி, பழனிமுருகன், பிரவீன், முத்தமிழ்ச்செல்வன், கோடிக்குளம் ராஜ்குமார் ஆகிய 6 பேரையும் கைது செய்து, 2 நாட்களாக விசாரித்தனர். இதில் 6 பேரும் இந்திய பணத்தை அமெரிக்க டாலராக மாற்றுவது, டாலரை இந்தியாவின் ரூபாயாக மாற்றுவது உள்ளிட்ட சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக ரூ.1 லட்சத்துக்கு ரூ.6,000 கமிஷன் கிடைத்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்குக்கு இவர்கள் பணத்தை அனுப்பி உள்ளனர்.அவர்களது உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என சாதாரண நபர்களை வங்கி கணக்கு தொடங்கச் செய்து, அவர்களது ஏடிஎம் கார்டுகள் மூலம் இந்த பணப் பரிவர்த்தனைகளை செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் திருச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு சர்வதேச அளவிலான ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.
கிரிப்டோ கரன்ஸி, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை, பங்கு வர்த்தகம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதால் அவர்களுக்கும், தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால், என்ஐஏ அதிகாரிகள் இந்த விவகாரத்தை கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

