Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வருகின்ற 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊழியர்கள், வேலையில் இருந்து நீக்கம்.தலைமைச் செயலாளர் அதிரடி எச்சரிக்கை.

0

'- Advertisement -

தமிழகத்தில் சில அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் நேற்று 3-ந் தேதியில் இருந்தும் அதுபோன்ற வேறு சில சங்கங்கள் வருகிற 10-ந் தேதியில் இருந்தும் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

 

அவ்வாறு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்,

 

இதுகுறித்து அனைத்து துறையின் செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறுகையில்,

 

“சில அங்கீகரிக்கப்படாத அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் 3-ந் தேதியில் இருந்தும் (அதாவது நேற்று செவ்வாய் கிழமை), அதுபோன்ற வேறு சில சங்கங்கள் வருகிற 10-ந் தேதியில் இருந்தும் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறியுள்ளன.

 

எனவே இந்த சூழ்நிலையில் ஏற்கனவே கூறியுள்ள அறிவுரைகளை நினைவூட்ட விரும்புகிறேன். அதன்படி, வேலை நிறுத்தம் அல்லது வேலை நிறுத்தம் செய்வதாக அச்சுறுத்துவது அல்லது அதுபோன்ற போராட்டங்களில் அரசு ஊழியர் பங்கேற்பது போன்றவை அரசின் அன்றாட செயல்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், அது தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறுவதாக அமைந்துவிடும்.

 

எனவே உங்களுக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி, இதுபோன்ற போராட்டத்தில் நடத்தை விதிகளை மீறி ஈடுபட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்க வேண்டும்.

 

இந்த போராட்டத்தில் ஈடுபடும் நோக்கத்தில் யாரும் அலுவலகத்திற்கு வராமல் இருந்தால், அவர்களுக்கு ‘பணியில்லை, சம்பளமும் இல்லை” என்ற அடிப்படையில், அந்த நாட்களை அங்கீகரிக்கப்படாத ‘ஆப்சென்ட்’ நாளாக கருதி, ஊதியமோ, படியோ வழங்கக்கூடாது. அவர்கள் மீது 17-பி விதிப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இந்த போராட்ட காலகட்டத்தில் அளிக்கப்படும் தற்செயல் விடுப்பு உள்ளிட்ட வேறு எந்தவித விடுப்பு என்றாலும் (மருத்துவ விடுப்பு தவிர) அதை அனுமதிக்கக்கூடாது.

 

போராட்டத்தில் ஈடுபடும், தினக்கூலி அடிப்படையிலான பகுதி நேர ஊழியர்கள், வேலையில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

 

மருத்துவ விடுப்பு கோரப்பட்டால் அதன் உண்மைத்தன்மையை மருத்துவ வாரியத்துக்கு அனுப்பி உறுதி செய்ய வேண்டும். அந்த மருத்துவ விடுப்புக்கான காரணம் சரியில்லை என்று தெரிய வந்தால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போராட்டத்தால் அரசுப் பணிகள் பாதிக்காதபடி மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் நேரக்கூடாது.

போராட்டம் முடியும் வரை பணியாளர்களின் வருகைப் பதிவு தொடர்பாக தினமும் காலை 10.15 மணிக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.