திருச்சியில் அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்கக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தின் திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகம், முன்பு, டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கைக் குழு சார்பில் மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் .
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட குழு ஆர்ப்பாட்டம் ….மண்டலம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்பு…
அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் .

திருச்சியில் அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்கக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தின் திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகம், (கலெக்டர் அலுவலகம்) முன்பு, டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கைக் குழு சார்பில் திருச்சி மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
2003-ம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாக தமிழக அரசின் நேரடி நிறுவனமாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் குறைந்த தொகுப்பூதியத்தில் மனக்குமுறலுடன் பணியாற்றிவரும் 30,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம், வீட்டு வாடகைப்படி, இ.எஸ்.ஐ மருத்துவ வசதி, இறந்தால் இழப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். சரக்கு இறக்கு கூலி, உடையும் பாட்டில்களுக்கு இழப்பீடு, கடை வாடகை, மின் கட்டணம், தூய்மைப்பணி, தண்ணீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட செய்து தர வேண்டும். காலி மதுபாட்டில்களை தனி முகமை மூலம் சேகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி.முருகானந்தம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சரவணன் கலந்துகொண்டு பேசினார்.நிர்வாகிகள் ஆறுமுகம், முருகையா, சண்முகநாதன், மணிகண்டன், நெல்சன், இளங்கோவன், காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
முடிவில் எம்.பிச்சைமுத்து நன்றி கூறினார்.

