Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.100 கோடி காணிக்கை திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த அன்று விஜிலென்ஸ் அதிகாரி அடித்துக் கொலை

0

'- Advertisement -

திருப்பதியில் ரூ.100 கோடி காணிக்கை திருட்டில் புகார் அளித்த விஜிலென்ஸ் அதிகாரி தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Ad banner

திருப்பதி ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பராக்காமணியில் எழுத்தராக பணிபுரிந்து வந்த சி.வி.ரவிக்குமார் என்பவர், கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம், வேட்டியில் தைக்கப்பட்ட ரகசிய பாக்கெட்டில் ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு டாலர்களை திருடிச் சென்றபோது, தேவஸ்தான விஜிலென்ஸ் தனி பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் கையும் களவுமாக பிடித்தார்.

 

விசாரணையில் பல ஆண்டுகளாக உண்டியல் பணத்தை சுமார் ரூ.100 கோடி வரை திருடி ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடங்களை கட்டியது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.40 கோடி சொத்துகள் பறிமுதல் செய்து வழக்கை முடித்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

 

இந்நிலையில் ஆந்திராவில் கடந்த ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்த நிலையில், ரவிக்குமாரிடம் ரூ.100 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருந்ததாகவும், தேவஸ்தானத்திற்கு வெறும் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமே எழுதி கொடுத்துவிட்டு, மீதமுள்ள சொத்துக்களை அப்போதைய ஆட்சியில் அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கு பிரித்துக்கொண்டதாக குற்றம்சாட்டி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

 

இதனையடுத்து கடந்த மாதம் ஆந்திர உயர்நீதிமன்றம் விசாரித்து லோக் அதாலத் தீர்ப்பை ரத்துசெய்து கூடுதல் டி.ஜி.பி. ரவிசங்கர் அய்யனார் தலைமையில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் ரவிக்குமாரை கையும் களவுமாக பிடித்த விஜிலென்ஸ் உதவி பாதுகாப்பு அதிகாரி சதீஸ்குமார் கடந்த 6ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

 

இந்த வழக்கில் மீண்டும் அவரை நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்ரி- குத்தி மார்க்கத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே நேற்று முன்தினம் சதீஷ்குமார் சடலமாக கிடந்து உள்ளார்

 

பிரேத பரிசோதனையில் மருத்துவர்கள் சதீஷ்குமாரின் தலையில் சி.டி. ஸ்கேன் எடுத்தனர். இதில் தலையின் பின்புறத்தில் பலத்த அடி காரணமாக மரணம் அடைந்ததும், உடலில் பல எலும்புகள் உடைந்தும் அடையாளம் காணப்பட்டன. இதன் மூலம் முன்னாள் தேவஸ்தான உதவி விஜிலென்ஸ் பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சதீஷ்குமார் மரணம் குறித்து விசாரிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.