இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சிக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை வழக்கம்போல் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பயணி ஒருவரின் சூட்கேஸை சோதனை செய்ததில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட 26 அரிய வகை பச்சை பாம்புகள் அதில் இருந்தன. எப்படிய்யா இதை விமானத்தில் எடுத்து வந்தான் என்பதுதான் அதிகாரிகள் அதிர்ச்சி இன்னும் உயர்ந்தது. உடனே அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அந்தப் பயணியிடம் விசாரணை செய்தனர்.
அப்போது இலங்கை விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படும் போது ஒரு நபர் தன்னிடம் இந்த பெட்டியில் சாக்லேட் இருப்பதாகவும் இதனை திருச்சி விமான நிலைய வாசலில் இருக்கும் தனது உறவினரிடம் கொடுக்குமாறு கூறினார். அதனால்தான் இந்த பெட்டியை வாங்கி வந்தேன என்று தெரிவித்துள்ளார்.

சூட்கேசில் இருந்த பாம்புகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து வன அலுவலர்கள் விமான நிலையம் விரைந்து வந்து பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளை ஆய்வு செய்தனர்.
அப்போது மேலும் ஒரு அதிர்ச்சி. கடத்தி வரப்பட்ட பாம்புகள் தாய்லாந்து வனப்பகுதியில் வாழக்கூடிய கடும் விஷம் கொண்ட அரிய வகை பாம்புகள் என்று தெரிய வந்தது. மேலும் ஒரு பாம்பின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என்றும் இந்தியாவில் இவ்வகை பாம்புகள் தடை செய்யப்பட்டு இருப்பதையும் தெரிவித்தனர்.
இதனையடுத்து கடத்தி வந்த பயணியுடன் அவற்றை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தங்கம், வெள்ளி கடத்தலை விட இந்த பாம்புகள் கடத்தில் பிசினஸ்க்கு கூடுதல் வருமானம் கிடைப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.