Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .

0

'- Advertisement -

கோடை வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும்.

 

கட்சி ஆரம்பித்து விட்டார்கள் என்பதற்காக விஜய் கட்சியினர் பேசுகிறார்கள்:

 

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

 

திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

 

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கருணாநிதி சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை…!

மே-1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், மண்டல தொமுச பொதுச் செயலாளர் ஜோசப்நெல்சன் முன்னிலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் மு.கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், சிலையின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மே 1 தின நினைவு சின்னத்தில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, மாநகரக் கழக நிர்வாகிகள் சந்திரமோகன், பொன்செல்லையா, பகுதி கழகச் செயலாளர் மணிவேல் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகமெங்கும் இன்று மே தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது அதற்கு அச்சாணியாக இருக்கின்ற உழைப்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்கள். இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். மத்திய அரசின் ஜாதி வாரி கணக்கெடுப்பு எப்பொழுது ஆரம்பிக்கும் எப்பொழுது முடியும் என தெரிவிக்காமல் பொத்தாம் பொதுவாக கூறியிருக்கின்றனர். பீகாருக்கு தேர்தல் வர இருக்கிறது 5 மாநில தேர்தல் வரயிருக்கிறது. தேர்தல்கள் காலம் வரும்பொழுது இதுபோன்று பலவிதமான அறிவிப்புகளை ஒன்றிய அரசிடமிருந்து எதிர்பார்க்கலாம். இது அறிவிப்போடு இருந்துவிடாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் . தமிழக முதலமைச்சர் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு என்றுமே தயாராக தான் உள்ளார்.

தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது திருச்சியில் நேற்று கூட 104° வெப்பம் உள்ளது . இப்போது ஜூன் மாதம் 2-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறியிருக்கிறோம். அந்த சமயத்தில் கடும் வெயில் இருந்தால் அது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து அப்போது முடிவு செய்யப்படும் .

தனியார் பள்ளிகள் அதிகப்படியாக பணம் வாங்குவது தவறு அவர்கள் அப்படி வாங்க கூடாது. இது குறித்து சட்டமன்றத்தில் பேசும் போது கூறியுள்ளேன். 2009ல் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான ஆணையம் முன்னாள் நீதியரசர்கள் தலைமையில் வைத்துள்ளோம். அந்த கமிட்டி என்ன சொல்கிறதோ அவர்கள் நிர்ணயிப்பதை விட அதிக கட்டணம் வாங்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கூறியுள்ளோம் அதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

Suresh

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக வெற்றிக்கழகம் 2026 -ல் திமுக எதிர்க்கட்சியாக கூட உட்கார முடியாது எனக் கூறியுள்ளதே ? என நிருபர்கள் கேட்ட பொழுது…. அது அவர்களது எண்ணம், கட்சி ஆரம்பித்து விட்டார்கள் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் சொல்லுகிறார்கள் என நான் பார்க்கிறேன் .

தேசிய கல்விக் கொள்கையை மற்ற மாநிலங்கள் சிறப்பாக அமல்படுத்துகின்றனர். தமிழக அரசுதான் தடையாக இருக்கிறது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் என கேட்டபோது.

தேசிய கல்விக் கொள்கை என்பது மொழி சார்ந்தது மட்டுமல்லாமல் அதில் நிறைய சரத்துக்கள் உள்ளன. மாணவர்கள் இடைநிற்றலே இல்லாத மாநிலமாக தமிழக அரசு உள்ளது . அந்த இடைநிற்றலை அதிகப்படுத்தும் வேலையை தான் அவர்கள் செய்ய போகின்றனர்.

 

நாம் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என வைத்துள்ளோம். ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புகளில் தான் தேர்வுகள் வைக்கின்றோம்.

ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு களுக்கு தேர்வுகள் உள்ளன . இது குழந்தைகளின் இடைநிற்றலை அதிகப்படுத்தும் என்பதும் ஒரு காரணம். ஆசிரியர்களை வஞ்சிக்க கூடிய மாணவர்கள் நலன் சார்ந்து வஞ்சிக்கக்கூடிய பல சரத்துகள் அதில் உள்ளன. எல்லாம் சேர்த்து தான் எதிர்க்கிறோம்.

குறிப்பாக நாம் இரு மொழிக் கொள்கையில் தீவிரமாக இருக்கும் போது அவர்கள் தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு கூறுகின்றனர் அது ஏற்கத்தக்கது அல்ல.

ஆசிரியர் காலி பணியிடங்கள் பொறுத்தவரை 6000 பேருக்கு நீங்கள் காத்திருப்பது போலவே நாங்கள் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் அது வந்தவுடன் அவர்களுக்கு பணியிடங்கள் நிரப்பப்படும்.

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா என கேட்டபோது …. அது தமிழக முதலமைச்சர் தலைமை கழகம் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்றார்.

பேட்டியின் போது மாநகர செயலாளர் மதிவாணன் உடன் இருந்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.