மதுரையில் கஞ்சா கடத்திய வழக்கில் 12 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சகோதரர்கள், தண்டனையைக் கேட்டதும் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வில்லாபுரம் பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் 7-ம் தேதி 25 கிலோ கஞ்சாவுடன் புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரியைச் சேர்ந்த சகோதரர்கள் பாண்டியராஜன் (வயது 23), ஜாக்கி என்ற பிரசாந்த் (வயது 22) மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா (வயது 20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை முதலாவது கூடுதல் போதைப்பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் விஜயபாண்டியன் வாதிட்டார். இந்த வழக்கில் மூவருக்கும் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பளித்தார்.

தீர்ப்பைக் கேட்டதும் ஆத்திரமடைந்த பாண்டியராஜனும், ஜாக்கியும் நீதிமன்றக் கண்ணாடிகளை கைகளால் அடித்து உடைத்ததில், இருவரின் கைகளிலும் ரத்தம் வழிந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் நின்றிருந்த போலீஸார் பிடித்து, நீதிமன்ற அறைக்கு வெளியே அழைத்து வந்தனர்.
நீதிமன்ற அறைக்கு வெளியே போலீஸாரின் பிடியிலிருந்து திமிறியபடி, நீதிபதியின் பெயரைக் கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். “நாங்கள் ரவுடி வெள்ளைக்காளி மற்றும் சமீபத்தில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சந்திரபோஸின் கூட்டாளிகள். சந்திரபோஸை ஏன் என்கவுன்ட்டர் செய்தீர்கள்? சிறைக்குப் போய்விட்டு வெளியே வருவோம். அப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள்” என கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும், போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். இதையடுத்து போலீஸார் இருவரையும் வெளியே கொண்டு வந்து, வேனில் ஏற்றி மதுரை சிறைக்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது, நீதிமன்றத்தில் கலவரம் செய்தது தொடர்பாக இருவர் மீதும் மதுரை அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தண்டனை விதித்த நீதிபதிக்கு குற்றவாளிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.