தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பள்ளி மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்தது.
இதற்கிடையே வருகிற ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதால், ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், ஜூன் 6ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது, ஜூன் 6ஆம் தேதி பள்ளி துவங்கினால் அடுத்து ஒரு நாள் மட்டும் பள்ளி இயங்கும் என்பதால், ஜூன் 10ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இதனால் பள்ளி திறப்பு தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.