திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ்நகர் விரிவாக்கம் சுதானா அவென்யூ பகுதியில் வசிப்பவர் கண்ணன்.
இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் மற்றும் காம்ப்ளக்ஸ் வைத்துள்ளார். இவரது கட்டிட பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு காட்டூர் கணேஷ்நகர் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வரும் பாஜ மாவட்ட மகளிர் அணி தலைவி ரேகா என்பவரை அணுகியுள்ளார்.
ரேகா குஜராத் கம்பெனியில் மலிவு விலையில் டைல்ஸ் வாங்கி தருவதாக கூறி கண்ணனிடம் கடந்த 2022ம் ஆண்டு ₹2 லட்சத்து 20ஆயிரம் பணம் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி டைல்ஸ் வாங்கி தரவில்லை. ரேகாவிடம் இதுகுறித்து தொழிலதிபர் கண்ணன் கேட்கவே ரேகா வாங்கிய பணத்திற்கு செக் கொடுத்துள்ளார். கண்ணன் செக்கை வங்கியில் டெபாசிட் செய்ய சென்றபோது பணமின்றி செக் ரிட்டன் ஆகிவிட்டது.
இதையடுத்து போலீசார் விசாரணையின்போது விரைவில் பணத்தை கொடுப்பதாக ரேகா கூறியுள்ளார்.
இந்தநிலையில் ஒன்றரை ஆண்டுகளாகியும் பணத்தை தராததால் நேற்றுமுன்தினம் திருச்சி எஸ்பிவருண்குமார் மற்றும் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் ஆகியோரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நேற்று திருவெறும்பூர் போலீசார் ரேகாவை அழைத்து விசாரணை செய்ததோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ரேகாவை கைது செய்தனர்.
தொழிலதிபர் கண்ணன் திருவெறும்பூர் வடக்கு மண்டல் பாஜக தலைவர் செந்தில்ராமின் உறவினர் ஆவார்.