Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலை பணி மனையில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள மின் மோட்டார் கடத்தல். 2 பேர் கைது. இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று பேர் சஸ்பெண்ட்

0

 

திருச்சி ரயில்வே பொன்மலை பணிமனையில் இருந்துதான் டார்ஜிலிங், ஊட்டி போன்ற மலைப்பாதைகளில் பயணிக்கக்கூடிய மலை ரயில்களுக்கான ரயில் என்ஜின்கள், பயணிகள் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.

உலகளவில் மலைப்பாதைகளில் பயணிக்க கூடிய ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகளை தயாரித்து வரும் நிறுவனத்தில் பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் நடந்தேறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் இங்கும் அரங்கேறியிருக்கின்றது.

அதாவது, திருச்சி பொன்மலை பலகட்ட பாதுகாப்பு மிகுந்த ரயில்வே பனிமலையில்
ரூ.50 லட்சத்திற்கும் மேல் மதிப்புடையை ரயில் என்ஜின் ட்ராக்சன் மோட்டாரை லாரியில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதுதொடர்பாக 2 பேரை ரயில்வே போலீசார் கைது செய்ததுடன், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

திருச்சி பொன்மலையில் மத்திய அரசின் நிறுவனமான ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் மற்றும் வடநாட்டினை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு டீசல் என்ஜின் பராமரிப்பு, டெமு இன்ஜின் பராமரிப்பு, பயணிகள் ரயில் பெட்டிகள் பாடி கட்டுதல், உலகப்புகழ் பெற்ற மலைப்பாதைகளில் பயன்படுத்தப்படும் நிலக்கரி, நீராவி ரயில் என்ஜின்கள், சரக்கு ரயில் முழு உற்பத்தி என பல்வேறு பணிகள் இந்தத் தொழிற்சாலையில் தான் செய்யப்படுகின்றது.
இதற்காக உதிரி பாகங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலகட்ட பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் இந்த ரயில்வே பணிமனைக்கு தேவையான உதிரி பாகங்கள் லாரிகளில் தினந்தோறும் கொண்டு வரப்படுவது வழக்கம். அதேபோல் தொழிற்சாலையில் இருந்து உதிரி பாகங்களை வெளியே கொண்டு செல்வதும் வழக்கம்.

இந்த நிலையில் ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் தலைமையிலான ரயில்வே போலீசார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளி அருகே மர்மமான முறையில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாதுகாப்புப்படை ஆய்வாளர் மற்றும் போலீசார் சோதனை செய்தபோது அந்த லாரியில் ரயில் என்ஜினுக்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே போலீசார், அந்த லாரியில் இருந்த 2 பேரிடம் விசாரித்தபோது தொழிற்சாலையில் இருந்து மின் மோட்டாரை கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த மின் மோட்டாரின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கோபால் (வயது 30), மணிகண்டன்(29) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ரயில்வே தொழிற்சாலையில் தூய்மை பணி நடந்து வருவதாகவும், அங்கு இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதாகவும், இதனால் தினமும் லாரிகளில் தொழிற்சாலைகளில் இருக்கும் தேவையற்ற குப்பை மற்றும் மணலை அள்ளிக் கொண்டு வெளியே கொட்ட வருவதாகவும், அப்படி வந்தபோது மின் மோட்டாரை லாரியில் வைத்து மேலே மணலை கொட்டி கொண்டு வந்ததாகவும், அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து அதிர்ச்சியடைந்த ரயில்வே நிர்வாகம், இந்த வழக்கில் மின் மோட்டார் திருடு போனது குறித்து அலட்சியமாக இருந்ததாக கூறி ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் கிரண், உதவி ஆய்வாளர் வெங்கடாசலம், காவலர் சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருக்கின்றது.

இந்த கடத்தல் சம்பவத்தில் பணிமனை ஊழியர்கள்,
அதிகாரிகள்,
பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் ரயில் எஞ்சின் உந்து சக்திக்கு பயன்படுத்தும் பல டன் எடையுள்ள இந்த மின் மோட்டார் வெளியே போவது எப்படி சாத்தியம்.

ஊழியர்களின் இருசக்கர வாகனங்களையே உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும் சோதனை செய்யும் ஆர்பிஎப் காவலர்கள் எப்படி இந்த லாரியை சோதனை செய்யாமல் வெளியே அனுப்பினார்கள் என அங்கு பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.