12 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – ஆசிரியர் போக்சோவில் கைது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் கோத்தகிரி டானிங்டன் பாரதி நகரை சேர்ந்த முரளிதரன் (வயது 46) என்பவர் வரலாறு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, கன்னத்தை தொடுவது என மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் 12 பேர் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை, சோலூர் மட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், குன்னூர் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில், ஊட்டி நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி, சப்- இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் நேற்று முரளிதரன் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.
அதில் ஆசிரியர் முரளிதரன், மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதும், பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முரளிதரனை கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீசார் குன்னூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி, கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.