

கோடிக்கணக்கில் வாடகை பாக்கி:
திருச்சி ஆபீசர்ஸ் கிளப் இழுத்து மூடப்பட்டது.
கலெக்டர் அதிரடி நடவடிக்கை.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே வ.உ.சி சாலையில் ஆபிஸர்ஸ் கிளப் என்ற பெயரில் மன மகிழ் மன்றம் ஒன்று செயல்பட்டு வந்தது.
கடந்த 1964 ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த சொக்கலிங்கம் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டு அடுத்த 1965 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் இந்த ஆபீஸர்ஸ் கிளப்பை திறந்து வைத்திருக்கிறார்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இந்த இடத்தில் இயங்கி வந்த ஆபிஸர்ஸ் கிளப்பில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் திருச்சியின் முக்கிய பிரபலங்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.
இங்கு டென்னிஸ் விளையாடுவதற்கான ஒரு மைதானமும், கட்டிடத்திற்குள் பில்லியட்ஸ், உள்ளிட்ட விளையாட்டுகளும் நடந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த கட்டிடத்திற்கு உரிய வாடகையை கிளப் நிர்வாகிகள் வழங்கவில்லை.
இது குறித்து பலமுறை அறிவுறுத்தியும் வாடகை வசூல் செய்து கொடுக்காததால் மாவட்ட ஆட்சியர் இந்த மனமகிழ் மன்றத்திற்கான குத்தகையை ரத்து செய்தார். இது தொடர்பாக கிளப் நிர்வாகிகள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள்.
அவர்களது வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் உடனடியாக இடத்தைவருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உத்தரவிட்டது .
அதன் பேரில் இன்று திருச்சி மேற்கு தாசில்தார் ஷேக் முஜிப் சம்பவ இடத்திற்கு சென்ற கட்டிடத்தை பூட்டி கையகப்படுத்தினர். மேலும் மன மகிழ் மன்றத்தின் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை ஆணையத்துடன் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஏற்கனவே மாநகராட்சி பிரதான கட்டிடம் அருகாமையில் செயல்பட்ட யூனியன் கிளப் கடந்தாண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த கிளப்பில் அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார் திடீரென நடத்திய ஆய்வில் மது பாட்டில்கள் கண்டறியப்பட்டன. அதற்கு முன்பாக கோட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு கிளப் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இடித்து நொறுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் மூன்றாவதாக இந்த ஆபீசஸ் கிளப்பும் வருவாய்த்துறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

