திருச்சி காவலர் குடியிருப்பில் மோதல்: 2 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு.
திருச்சி மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பில் போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் மோதல்.
2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்கு.
திருச்சி பாலக்கரை மார்சிங் பேட்டை காவலர்கள் குடியிருப்பில் உள்ள பவானி பிளாக் பகுதியில் வசித்து வருபவர் பத்மா (வயது 44). இவரது கணவர் பத்மநாதன் பாலக்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அதே காவலர்கள் குடியிருப்பில் வசித்து வரும் செல்வக்குமார் பொன்மலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இதில் பத்மாவிற்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வ குமார் மனைவி மாலதிக்கும் இடையே நகை கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி இரவு 9 மணி அளவில் பத்மா தன்னுடைய கணவர் பத்மநாபன் குழந்தைகள் கிருத்திகா, சதீஷ்குமார் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய நான்கு பேருடன் மார்சிங் பேட்டை காவலர்கள் குடியிருப்பில் உள்ள பிள்ளையார் கோவிலில் தரிசனத்திற்காக வந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த செல்வகுமார் குடும்பத்தினர் பத்மாவின் மகள் முடியை பிடித்து இழுத்து கல்லைக் கொண்டு அடித்து தாக்கியுள்ளார்.
இது குறித்து கணவன் மனைவி இருவரும் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த செல்வகுமார், பத்மா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். அவர்களும் பதிலுக்கு செல்வகுமார் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர் .
இதில் பத்மநாபனின் குழந்தைகளான கிருத்திகாவையும் சதீஷ்குமாரையும் தமிழ்ச்செல்வியையும் கடுமையாக தாக்கியதில் குழந்தைகளின் தலை மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதோடு சதீஷ்குமாரின் பற்கள் உடைந்துள்ளது.
இதனால் ஐந்து பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.நேற்று முன்தினம் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர்கள் நேற்று கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வக்குமார் மற்றும் அவரது மனைவி மாலதி மகன் அமரேஷ், அபிஷேக் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் பத்மநாபன் அவரது மனைவி பத்மா, குழந்தைகள் கிருத்திகா, தமிழ்செல்வி, சதீஷ்குமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

