
கனிமவளத் துறை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
விவசாய நிலத்தில் ஏற்பட்டுள்ள மண் மேடுகளை அப்புறப்படுத்தத் தடையாக உள்ள கனிமவளத் துறையைக் கண்டித்தும், களிமண் கிடைக்காமல் செங்கல் அறுக்கும் தொழிலாளர்கள் வேலையிழக்கும் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு விவசாயிகள், செங்கல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை
பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கருப்பு கொடி ஏந்தி வியாழக்கிழமை இன்று
திருவானைக்காவலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் பகுதிச் செயலாளர் வீரமுத்து தலைமை தாங்கினார். மாநகர் மாவட்டத் தலைவர் கே.சி.பாண்டியன், மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்டப் பொருளாளர் தனபால் ஆகியோர் பேசினர்.
மாநிலத் துணைத் தலைவர் முகமதலி சிறப்புரையாற்றினார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் விஜி, சகாதேவன், பன்னீர்செல்வம், தமிழ்மாறன், பெல் பாஸ்கர், கஜேந்திரன், சேகர், நாகராஜ், செந்தமிழ், பிரபு, ராமச்சந்திரன், பெர்னாண்டஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விவசாயிகள் மற்றும் செங்கல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் கனிமவளத் துறையின் செயல்பாடுகளைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

