திருச்சி ஆர்த்தோபடிக் சங்கம் சார்பில தேசிய எலும்பு முறிவு வார விழிப்புணர்வு ..
எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம் .
இந்திய எலும்பு முறிவு சங்கம், தமிழ்நாடு எலும்பு முறிவு சங்கம் மற்றும் திருச்சி ஆர்த்தோபடிக் சங்கம் ஆகியவை சார்பில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு ‘தேசிய எலும்பு முறிவு மற்றும் மூட்டு நல வாரம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது ..
இது குறித்து திருச்சி எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்களும்ம், திருச்சி எலும்பியல் சமூக தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் டெரன்ஸ் ஜோஸ் ஜெரோம், மத்திய மண்டல உறுப்பினர் தேவேந்திரன் ஆகியோர் இன்று திருச்சி பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது:-
எலும்பு ஆரோக்கியத்தைப் பேண ‘6-S’ என்ற விழிப்புணர்வு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் முதுகு தண்டுவட வளைவு மற்றும் முட்டி குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தல்.
65 வயதிற்கு மேற்பட்ட 5 ஆண்களில் ஒருவருக்கும், 3 பெண்களில் ஒருவருக்கும் எலும்பு அடர்த்தி குறைவு நோய் காணப்படுகிறது. இதனால் எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
தவறான முறையில் அமர்வதால் கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படுகிறது. விபத்துகளுக்கு அடுத்தபடியாக உலக சுகாதார அமைப்பு இதனை 2-வது பெரிய பாதிப்பாக அறிவித்துள்ளது. இதனைத் தவிர்க்க தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது அவசியம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 6.8 லட்சம் பேர் சாலை விபத்து சந்திக்கும் வேளையில், அதில் 42 சதவீதத்தினர் 19 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் கட்டுவது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை முறையான கடைப்பிடிப்பது அவசியம் .
4 முதியவர்களில் ஒருவர் தவறி விழுந்து இடுப்பு எலும்பு முறிவுக்கு ஆளாகின்றனர்.
இதனையொட்டி திருச்சி ஆர்த்தோபடிக் சங்கம் சார்பில் நோயாளிகள், அவர்களுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு இலவசமாக எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்யப்படுகிறது.
இன்றைய இளைஞர்களிடையே செல்போன் மற்றும் ரீல்ஸ் பார்க்கும் மோகம் அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் வெளிப்படை உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவது குறைந்து விட்டதால், சூரிய வெளிச்சம் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படுகிறது.
மேலும், ரீல்ஸ் பார்த்துக்கொண்டே வாகனங்களை இயக்குவதால் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் செல்போன் பயன்பாட்டைக் குறைத்து உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும்” என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

