திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மீது சிபிஐ விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.இந்து திருக்கோவில்கள்மீட்பு இயக்கத்தினர் பேட்டி
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை நிரப்புவதற்கு

காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் வலியுறுத்தல்.
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் நடவடிக்கை தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்தது குறித்து,
இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் சார்பில் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்கத்தின் செயல் தலைவர் வையாபுரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் மெல்டியூ, நிறுவனத் தலைவர் மகேஸ்வரி வையாபுரி ஆகியோர் கலந்துகொண்டு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
ஆயிரம் ஆண்டுகள் பழமையான மலைக்கோட்டை தெப்பக்குளத்துக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி ஆற்றில் இருந்துதான் தண்ணீர் வந்து கொண்டிருக்கிற நிலையில், தற்போது சின்டெக்ஸ் டேங்க் மூலம் தண்ணீர் வழங்குவதாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கூறுவது என்பது ஏற்புடையது அல்ல.
மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி, ஆணையரும் தண்ணீர் காவேரியில் இருந்து கொண்டு வர இயலாது என பொய்யாக கூறுவதை ஏற்க முடியாது. மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்துசமய அறநிலைத்துறையின் தவறான நிர்வாகத்தினால் சாரதாஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில், குளத்திற்கு தண்ணீர் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வருதற்கும், தண்ணீரை வெளியேற்றுவதற்கு வசதிகள் உள்ளது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர்கள் ஆய்வு செய்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மன்னர் காலத்தில் சின்டெக்ஸ் டேங்க் இல்லாத நிலையில் தற்போது அதிகாரிகள் சின்டெக்ஸ் டேங்க் கொண்டு தான் தண்ணீர் நிரப்புகிறோம் என கூறுவது ஏற்புடையது அல்ல. கோவில் நிலங்களையும் தெப்பக்குளத்தையும் பராமரிப்பதில் அரசு தவறிவிட்டது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு எதிராக சிபிஐ விசாரணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.
மலைக்கோட்டையை சுற்றிலும் அகழி இருப்பதற்கான ஆதாரங்கள் 1966ல் பதிவேட்டில் உள்ளது, காலப்போக்கில் அது ஆக்கிரமிப்புகளால் மூடி மறைக்கப்பட்டுவிட்டது. இந்து சமய அறநிலைத்துறை மெத்தனத்தினால்தான் பல்வேறு கோவில்களையும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களையும் இழந்து வருகிறோம. புராதான சின்னங்களை பாதுகாக்க தொல்லியல் துறை தவறிவிட்டது. மேலும் அரசு அதிகாரிகள் மீது நம்பிக்கை கிடையாது, தனிநபர்கள் லாபத்திற்காக அறநிலையத்துறை மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் அளிக்கப்பட்டு விட்டது.
மேலும், தெப்பக்குளத்தை தூர்வார மற்றும் பராமரிக்க தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டாம். கோவில் சொத்துக்களை கொள்ளை அடிக்காமல் இருந்தாலே போதுமானது என தங்களது கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.
இவ்வாறு அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறினர்
பேட்டியின் போது இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கத்தின் செயல் தலைவர் வையாபுரி,மாநகர் மாவட்ட தலைவர் நாராயணன் ,புறநகர் மாவட்ட தலைவர் வரதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

