முசிறி தாலுகா, சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த தாதம்பட்டியில் சட்டவிரோதமாக மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக முசிறி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

இந்தத் தகவலின் பேரில், வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் தாதம்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று அதிரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அந்த கிராமத்தில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் எவ்வித அரசு அனுமதியுமின்றி சுமார் 80 யூனிட் மணல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, சட்டவிரோத மணல் பதுக்கல் குறித்து கனிமவளத்துறை வட்டாட்சியருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மணல் பதுக்கிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு வருவாய்துறையினர் புகார் அளித்தனர். பின்னர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணலை வருவாய்த்துறையினர் கைப்பற்றி, முசிறி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

