சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ராணி என்பவர் தனது கணவரை நீரிழிவு நோய் சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.
வார்டு அருகே உள்ள கழிவறைக்கு ராணி சென்றபோது, அடையாளம் தெரியாத பர்தா அணிந்த மர்ம பெண், ராணி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அதில் ராணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அப்போது அந்த பர்தா அணிந்த பெண் தப்பியோடிவிட்டார். அந்த பெண்ணை போலீசார் பிடித்து கைது செய்து உள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்த ராணி (வயது 65) என்பவர், கடந்த 10-ந் தேதி தனது கணவரை நீரிழிவு நோய் சிகிச்சைக்காக கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது வார்டு அருகே உள்ள கழிவறைக்கு ராணி சென்றுள்ளார். அங்கு அடையாளம் தெரியாத பர்தா அணிந்த மர்ம பெண், ராணி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். உடனே, ராணி கத்தி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த மர்ம பெண், ராணியின் தலையில் சுத்தியலால் தாக்கியிருக்கிறார். ராணி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து விழுந்தார்.
இவரது சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்து பர்தா பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த ராணிக்கு தலையில் 5 தையல்கள் போடப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உயிர் பிழைத்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் ஆல்ட்ரின் மேற்பார்வையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரித்தனா்
விசாரணையில், தரமணியை சேர்ந்த நித்யா (வயது 29 ) என்பவர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டில் வைத்து போலீசார் நித்யாவை அதிரடியாக கைது செய்தனர். நித்யாவிடம் நடத்திய விசாரணையின்போது, ராணியை தாக்கியது ஏன்? என்பது குறித்து அவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், எனது தந்தை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் நீரிழிவு நோயினால் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு துணையாக நானும் மருத்துவமனையில் இருந்தேன்.
அப்போது, ராணிக்கும், எனக்கும் சண்டை ஏற்பட்டது. அவர் என்னை அசிங்கமாக திட்டினார். இதனால் அவரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தேன். அவரை தாக்குவதற்காக வீட்டில் இருந்து சுத்தியலை எடுத்துக்கொண்டு வந்தேன். என்னை அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க தியாகராயநகரில் உள்ள ஒரு கடையில் பர்தா உடையும் வாங்கி கொண்டேன். பர்தா உடை அணிந்து தாக்கினால் என்னை கண்டுபிடிக்க முடியாது என நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்து விட்டனர்” இவ்வாறு நித்யா போலீசிடம் கூறியதாக கூறப்படுகிறது.

