கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள காமசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 32) இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் பெரியசாமிக்கும் கோகிலா (வயது 25) என்பவருக்கும் 3 ஆண்டுக்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பெரியசாமி இருசக்கர வாகனத்தில் நமலேரி கூச்சுவாடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற 2 வாலிபர்கள் அவரை தாக்கி உள்ளனர். கத்தியால் அவரது தலையில் வெட்டி விட்டு இனிமேல் எங்கள் பிரச்சனையில் தலையிட்டால் உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து அவர் தேன்கனினக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சூளகிரி அருகே சூழால் தின்னை கிராமத்தை வெங்கட்ராமன்.(வயது 24 ) என்பவரும் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் சேர்ந்து பெரியசாமியை கத்தியால் வெட்டி சென்றது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அந்த 17 வயது சிறுவனுக்கும் பெரியசாமியின் மனைவி கோகிலாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. கள்ளத்தொடர்பை அறிந்த பெரியசாமி மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி கோகிலா இதுகுறித்து கள்ளக்காதலனான, 17 வயது சிறுவனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் தனது நண்பரான வெங்கட்ராமனிடம் உதவி கேட்டுள்ளார். இருவரும் சேர்ந்து பெரியசாமியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர். அவரை வழிமறித்து தலையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது அனைத்தும் போலீசாரிம் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் கொலை வெறி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பெரியசாமியின் மனைவி கோகிலா, வெங்கட்ராமன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் 17 வயது சிறுவனை சேலம் கூர்நோக்கு இல்லத்திலும், கோகிலாவை தருமபுரி பெண்கள் கிளை சிறையிலும், வெங்கட்ராமனை ஓசூர் கிளை சிறையிலும் போலீசார் அடைத்தனர். 17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால், மனைவியே கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டதும், 17 வயதிலேயே கள்ள காதலிக்காக சிறுவன் கொலை செய்யும் அளவிற்கு துணிந்ததும் காமசந்திரம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.