சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் வைகுந்தம் பகுதியில் சர்வீஸ் சாலையோரம் சிறிய தரைமட்ட பாலத்தின் கீழ் கடந்த 30ம் தேதி ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று சூட்கேசை திறந்து பார்த்தனர்.
அதில், இளம்பெண் முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு, அழுகிய நிலையில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். அந்த பெண்ணின் இரு கைகளிலும் தலா 6 விரல்கள் இருந்தது. அவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இதையடுத்து பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருகில் உள்ள மாவட்டங்களில் தங்கும் விடுதிகள் மற்றும் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதன செய்தனர். அதில், பெண்ணின் தலையில் காயம் இருந்தது தெரிய வந்தது. மேலும் இறந்த பெண்ணுக்கு 18 வயது இருக்கும் என்றும் அப்பெண்ணை லாட்ஜில் வைத்து சித்ரவதை செய்து கொன்று லாட்ஜில் பயன்படுத்தப்படும் போர்வையால் சுற்றி சூட்கேசில் திணித்ததும் சடலத்தை மறைக்க சங்ககிரியில் கொண்டுவந்து போட்டுள்ளதும் தெரியவந்தள்ளது.
பெண் சடலமாக கிடந்த சூட்கேஸ் பெங்களூரில் வாங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த சூட்கேசில் ‘டிராவல் கிளப் யூஎஸ்ஏ’ என ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த கம்பெனி பெங்களூர் உள்பட 4 இடத்தில் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. புதிதாக வாங்கப்பட்ட இந்த சூட்கேசில் சடலத்தை திணித்துள்ளனர்.மேலும் அந்த பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், பெண்ணின் உடல் உறுப்புகளை போலீசார் தனித்தனியாக எடுத்து வைத்துள்ளனர்.
இதனிடையே தனிப்படை போலீசார் சுங்கச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர்.