பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: சைபர் கிரைம் போலீஸார் திருமாவளவன் மீது வழக்கு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அதில், பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து திருமாவளவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸாருக்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருமாவளவன் பேட்டியை போலீஸார் ஆய்வு செய்தனர். பின்னர், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்தனர்.
இதையடுத்து கலகம் விளைவிக்கும் ஒரு கருத்தோடு செயல்படுதல், சமயம் இனம் சார்ந்து வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை உருவாக்குதல், மத உணர்வை புண்படுத்தும் சொற்களை சொல்லுதல் உட்பட 6 பிரிவுகளின்கீழ் திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.