கிராமாலயா பத்மஸ்ரீ எஸ்.தாமோதரனின் “வாய்மை எனப்படுவது யாதெனின் – ஒரு சாமானியனின் சாதனை பயணம்” சுயசரிதை நூலை முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார் .
கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், திருச்சியை சார்ந்த சமூக ஆர்வலருமான பத்மஸ்ரீ எஸ்.தாமோதரன், கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு 2022ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாற்று நூலான “வாய்மை எனப்படுவது யாதெனின் – ஒரு சாமானியனின் சாதனை பயணம்” என்கிற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கீதா ஜெகன் வரவேற்றார். லயன் டேட்ஸ் நிர்வாக இயக்குனர் பி.பொன்னுதுரை, முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஆகியோர் சுயசரிதை நூலை வெளியிட, முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நூலை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்., “இந்தியர்கள் ஒவ்வொருவரின் வரலாற்றையும் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் கடந்து வந்த பாதை, சாதனைக்கு பின்னால் இருக்கும் வலிகள் ஆகியவற்றை உணர்த்திட முடியும். மிக குறிப்பாக பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமாலயா எஸ்.தாமோதரன் உண்மையாகவே பாராட்டுக்குரியவர்.இவரது முயற்சியின் காரணமாகவே கடந்த 2003ம் ஆண்டில் திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகிலுள்ள தண்டவம்பட்டி இந்தியாவின் முதல் கிராமமாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நாட்டின் பல கிராமங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டு சுகாதாரம் பேணப்பட காரணமாக இருந்தது. அவர் பத்மஸ்ரீ விருது பெறுவதற்கு தகுதி பெற்றவர். அவருக்கு நான் பத்மஸ்ரீ விருது வழங்கியதை பெருமையாக கருதுகிறேன். ஏனென்றால் இந்தியாவின் தென்பகுதியிலுள்ள கிராமத்தில் பிறந்து, இந்தியா முழுமைக்கும் இதுவரை சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான கழிப்பறைகளை கட்ட அவரது தொண்டு நிறுவனம் விழிப்புணர்வு செய்திருக்கிறது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஊர் ஊராக சென்று, கிராமம் தோறும் பெண்கள் சுகாதாரம், சுத்தமான குடிநீர், மாதவிடாய் விழிப்புணர்வு குறித்து கிராமாலயா தொண்டு நிறுவனம் நடத்திய விழிப்புணர்வு போற்றத்தக்கது. தாமோதரனின் வாழ்க்கை வரலாற்று நூலான “வாய்மை எனப்படுவது யாதெனின் – ஒரு சாமானியனின் சாதனைப் பயணம்” என்கிற சுயசரிதை நூலை நீங்கள் ஒவ்வொருவரும் அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது என கேள்வி கேட்பதை விடுத்து, நம் நாட்டு முன்னேற்றத்திற்கும், இந்த சமுதாய முன்னேற்றத்திற்கும் நாம் என்ன செய்தோம்? என்று பதில் கேள்வி கேட்பதிலேயே நமது வாழ்வின் உண்மையான அர்த்தம் இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்றார். தொடர்ந்து பேசிய பத்மஸ்ரீ எஸ்.தாமோதரன், 1987ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிராமாலயா தொண்டு நிறுவனம், தற்போது 40 ஆண்டுகளை கடந்தும் சமூக சேவையில் இயங்கி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான பயணத்திற்கு ஒத்துழைத்துவரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக நான் எழுதும்போது, இந்த சாதனை பயணத்திற்கு உதவியாக இருந்த பல மனிதர்களை நன்றியோடு நினைத்து பல தருணங்களில் நெகிழ்ந்திருக்கிறேன். இந்த சமூக பயணத்திற்கு மிகவும் பேருதவியாக இருந்த எனது மனைவிக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிராமாலயா நிறுவன வளர்ச்சிக்கும், சமூக தொண்டாற்றுவதற்கும் அர்ப்பணிப்போடு செயல்படும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுக்கும் நன்றி கடன் செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, மகளிர்க்கான மாதவிடாய் சுகாதாரம் ஆகிய மூன்றையும் முன் நிறுத்தி, இன்னும் பல சாதனைகளை கிராமாலயா தொண்டு நிறுவனமும், சமூக சேவை அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்தும். விரைவில் இந்த நூலை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இது பலருக்கும் உத்வேகமாக இருக்கும்” என்றார். இவ்விழாவில், கிராமாலயா தொண்டு நிறுவன எம்.ஹச்.எம் இயக்குனர் ப்ரீத்தி தாமோதரன், விஜயலட்சுமி தாமோதரன், ஃபிப்த் ஜென் அகாடமி நிறுவனர் வாசுதேவன், மனைவீடு குருநாதன், சேவை.மோகன், கே.பத்மநாபன், வி.கே பரமசிவம், ஜெகநாதன், இளங்கோவன், அலைகள் பெண்கள் கூட்டமைப்பினர், ரோட்டரி சங்க நிர்வாகிகள், பல்வேறு தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளும், ஊழியர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் ..

