விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் தமாகா விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி

திருச்சியில் தமாகா விவசாய அணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திருச்சி மாவட்ட விவசாய அணி சார்பில் முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிப்படி விவசாயிகள் வாங்கிய அனைத்து வேளாண் கடன் மற்றும் நிலுவை கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், விவசாயிகளிடம் பாகுபாடு காண்பிப்பதை கண்டித்தும் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வயலூர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் எஸ்பி தியாகராஜன் நிர்வாகிகள் அழகப்பன், சுப்பிரமணி, அய்யாவு உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் 5 ஏக்கருக்குள் சிறு குறு விவசாயிகளின் கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாங்கிய கடன் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என உத்தரவாதம் அளித்தபடி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

