விவசாயிகளின் பயிர்களை காப்பாற்ற வடகரை வாய்க்கால் தலைப்பை மாயனூர் தடுப்பணைக்கு மாற்ற வேண்டும் .

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இன்று ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது.: –
திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் பகுதிகளில் மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பிருந்தே வடகரை வாய்க்கால் மூலமாக குறுவை, சம்பா, கோடை என்ற மூன்று போகம் நெல் ,வாழை, கரும்பு என்று சுமார் 1 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்து வந்தோம்.
காவிரியாறு மேடாகவும், வடகரை வாய்க்கால் பள்ளத்திலும் இருந்தது. 1980க்கு பிறகு வடகரை வாய்க்கால் மதகு தலைப்பான ஸ்ரீராமசமுத்திரத்தில் சுமார் 25 அடி ஆழத்திற்கு மணலை எடுத்து விட்டதால் காவிரியில் வரும் தண்ணீர் வடகரை வாய்க்காலில் ஏறி வருவது இல்லை.
இதனால் மாயனூர் தடுப்பணைக்கு வடகரை வாய்க்கால் தலைப்பை மாற்றச் சொல்லி பலமுறை போராட்டம் நடத்தினோம். தென்கரை வாய்க்கால் தலைப்பு மாயனூர் தடுப்பணையில் உள்ளதால் கரூர். குளித்தலை பகுதிகளில் வாழை, கரும்பு, வெற்றிலை சாகுபடி செய்ய முடிகிறது. எனவே தொட்டியம், முசிறி விவசாயிகளை காப்பாற்ற மேட்டூரில் இருந்து 1500 க.அடிக்கு பதில் 2000 க அடி தண்ணீர் திறந்துவிட்டு திருஈங்கோய் மலை அருகில் காவிரி ஆற்றில் இருந்து திருட்டு தனமாக 10000 லாரி மணலை திருடியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை எனில் போராட்டம் நடத்த அனுமதி வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
மனு அளித்தபோது சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மேகராஜன், தட்சணாமூர்த்தி, மலர்மன்னன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

