தமிழகம் முழுவதும் திராவிட வெற்றி கழகம் திமுகவிற்கு பிரச்சாரம் செய்து வருகிறது . திருச்சியில் மல்லை சத்தியா பேட்டி


தமிழகத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டப்பேரவை அமையும். மல்லை சத்யா பேட்டி.
திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனர் மல்லை சத்யா, திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட வெற்றி கழகம் திமுகவிற்கு நிபந்தனைற்ற ஆதரவை அளித்து வருகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறோம்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்பதே நாட்டு மக்களின் விருப்பம். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு சட்டப்பேரவையை முதல்வர் அமைப்பார்.
மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், திமுகவிற்காக அவர்களுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம். அவர்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
திமுக கூட்டணியில் வலுவான கட்டமைப்போடு தோழமைக் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பிரச்சாரம் செய்கின்றன. முதல்வர், துணை முதல்வர், கனிமொழி உள்பட கூட்டணி கட்சியினர் அனைவரும் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர்.
ஆனால், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே ஒற்றை ஆளாகப் போராடுகிறார். வலுவான கூட்டணி இல்லாததால் அவர் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளார். இதன் விரக்தியால்தான் முதல்வர் மீது அவர் தனிநபர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இது ஒரு தலைவனுக்கு அழகல்ல.
தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் 8 நாட்கள் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி, கார்கே தமிழகம் வருகை தந்து தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும் பாஜகவிற்கு இங்கு இடமில்லை. கடந்த 12 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் எனப் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மேலும், மதுரை எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ விரிவாக்கப் பணிகளில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
பாஜக, அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ள ‘பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு பவுன் தங்கம்’ போன்ற வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாதவை. ஒட்டுமொத்த இந்தியப் பட்ஜெட்டை ஒதுக்கினாலும் இது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது.
விசில் சத்தம் திரையரங்குகளில் வேண்டுமானால் எடுபடலாம், ஆனால் சட்டமன்றத்தில் அது எடுபடாது. தமிழக வெற்றி கழகத்தினருக்கு அரசியல் புரிதல் இல்லை. குக்கரில் கூட விசில் வரும். விசில் சத்தம் மூலம் மாற்றத்தை உருவாக்க முடியாது.
தமிழகத்தில் முதல் இடத்தில் திமுக கூட்டணி உள்ளது. இரண்டாவது இடத்தில் வர வேண்டிய அதிமுக மிகமிக பின் தங்கியுள்ளது. மூன்று, நான்காம் இடத்திற்கு இரு கட்சிகள் போட்டியிடுகின்றன. எத்தனை கட்சிகள் வந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது. சிறந்த ஆட்சியை முதல்வர் வழங்கியுள்ளார். அவரது ஆட்சி தொடரும் என தெரிவித்தார்.

