மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமதுக்கு தி.மு.க. ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள உள் பூசல், வெற்றிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக அப்துல் சமது போட்டியிடுகிறார்.
ஆனால், இங்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட செயலாளராக இருக்கும் நிலையில், மற்றொரு அமைச்சரான நேருவுக்கு தனியான ஆதரவாளர்கள் குழு உள்ளது. இவர்கள் உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகளுடன் ஒட்டாமல் தனியாக செயல்படுவது வழக்கம்.
இந்நிலையில், மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமதுவை அறிமுகம் செய்யும் கூட்டணிக் கட்சியினர் கூட்டத்துக்கு அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு அளிக்கப்படவில்லை. கூட்டத்துக்கு வந்த நேருவை, ஆண்டவர் கோவில் அருகே அவரது ஆதரவாளர்கள் வழிமறித்து, ‘எங்களை அழைக்கவில்லை’ என்று புகார் தெரிவித்து உள்ளனர். உடனே அமைச்சர் நேரு, ‘உங்களை கூப்பிடாவிட்டால் நீங்கள் வரவேண்டாம். நான் மட்டும் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டு கூட்டத்துக்குச் சென்று உள்ளார் .
கூட்டம் முடிந்த பிறகு அதே இடத்தில் நேருவை அவரது ஆதரவாளர்கள் வழியனுப்பி வைத்து உள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த மணப்பாறை தி.மு.க.வினர், ‘அவர்களையும் அழைத்து வர வேண்டிய அமைச்சர் நேருவே, வர வேண்டாம் என்று சொன்னது என்ன நியாயம்?’ என்று குமுறுகின்றனர். ‘தி.மு.க. முதன்மை செயலராக இருக்கும் ஒருவர் இருக்கும்போது இப்படி நடப்பது சரியா?’ என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த உள் பூசல் காரணமாக, ம.ம.க. வேட்பாளர் அப்துல் சமதுக்கு அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வெற்றிக்கனி எட்டாக்கனியாகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
தி.மு.க. கூட்டணியில் இப்படி ஒரு உள் மோதல் வெளியே தெரிய வருவது, மணப்பாறை தொகுதியில் கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம், தி.மு.க. தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை தொகுதியில் ம.ம.க. வேட்பாளர் அப்துல் சமதுக்கு தி.மு.க. ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள உள் பூசல், வெற்றியை பறிக்கும் என கூறப்படுகிறது .

