நிகிதா பொய் புகாரில் ஒன்றும் செய்யாத ஒருவரை அடித்து கொன்ற காவல்துறையினருக்கு ஜாமீன் வழங்க முடியாது.வழக்கு முடியும் வரை உள்ளே இருக்கட்டும், நீதிபதி அதிரடி உத்தரவு.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்
காவல்துறையினரின் இந்த செயலை பார்க்கும் போது மனம் பதறுகிறது. ஒன்றும் இல்லாத வழக்கில் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார் என்று நீதிபதி கூறியுள்ளார். யாராக இருந்தாலும் வழக்கு முடியும் வரை சிறையில் இருக்கட்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக அஜித் குமார் (வயது 29) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை மாதம் அவர் மீது நிகிதா என்ற பேராசிரியை, நகை திருட்டு புகார் தெரிவித்தார். அதுகுறித்த விசாரணைக்காக அஜித்குமாரை தனிப்படை போலீசார் அழைத்து சென்றனர். பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்ற நிலையில் போலீசார் அவரை கடுமையாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அஜித்குமார் இறந்துவிட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து, மானாமதுரைைய சேர்ந்த தனிப்படை போலீசாரான கண்ணன், பிரபு, ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன், போலீஸ் வாகன டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அஜித் குமார் லாக் அப் டெத் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கில் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை கோர்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மானாமதுரை போலீஸ் டிஎஸ்பி. சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மேலும் 4 போலீசார் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் அஜித் குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது. இதில் 5 பேர் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சிபிஐ தரப்பில் பதில் மனு வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதி நிகிதா அளித்த புகார் சரியானதா என கேள்வி எழுப்பினார். இதற்கு சிபிஐ தரப்பில் நிகிதா அளித்த புகாரில் உண்மை இல்லை என கூறியது. அஜித் குமார் உயிரிழப்பு காவல் மரணம் என்பது உறுதி ஆகியிருக்கிறது என்றும் சிபிஐ கூறியது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஒன்றுமே இல்லாத வழக்கில் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளனர். இப்படி அடித்த காவல் துறையினருக்கு பாடம் புகட்ட வேண்டும். அஜித் குமார் மரண வழக்கில் யாராக இருந்தாலும் வழக்கு முடியும் வரை உள்ளேயே இருக்கட்டும் என்று நீதிபதி கூறினார்.

