திருச்சி சிறப்பு காவல் படை காவலர் துறைரீதியிலான பிரச்சனையால் தற்கொலை.?
தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலணி பயிற்சி மையத்துடன் கூடிய அலுவலகம் மற்றும் இருப்பிட வளாகம் திருச்சி கிராப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது.
இதில் முதல்நிலைக் காவலலாக பணியாற்றி வந்தவர் சுகுமார் (வயது40). இவர் காவல் படை வளாகம் எதிரே உள்ள ரெயில்வே மைதானத்தில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். காவலர் தற்கொலை செய்துகொண்டது துறைரீதியான பிரச்னைகளாலா? அல்லது வேறு ஏதும் குடும்ப பிரச்னையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.