என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு மாற்றுத்திறனாளி கணவன் தான் காரணம் எனக் கூறி தாக்கிய ரவுடி துரையின் தங்கை மற்றும் கள்ளக்காதலி கைது .ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் .
திருச்சி:
புதுக்கோட்டையில், திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கில், அவரை காட்டிக் கொடுத்ததாக மாற்றுத்திறனாளியான கணவனை தாக்கிய ரவுடியின் தங்கையும், அவரது கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி.
இவர், கடந்த சில நாட்களுக்கு முன், புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் பகுதியில் உள்ள தைலமரக்காட்டில் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
இறந்த துரைசாமியின் தங்கை, சசிகலா, (வயது 43) இவரது கணவர் பாலமுருகன், மாற்றுத்திறனாளி. இவர்கள், எட்டரை பகுதியில் வசித்து வருகின்றனர். தன் சகோதரர் என்கவுன்டர் செய்யப்பட, கணவர் பாலமுருகன் தான் காரணம் என நினைத்த இவர், நேற்று முன்தினம் அவருடன் சண்டை போட்டுள்ளார்.அப்போது அங்கு வந்த துரைசாமியின் கள்ளக்காதலி, உய்யகொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்த அனுராதா, (45), என்பவரும் சேர்ந்து, பாலமுருகனை தாக்கி, அவர் வைத்திருந்த பணம், நகை ஆகியவற்றை பிடுங்கிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து பாலமுருகன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, சோமரசம்பேட்டை போலீசார், அனுராதா வீட்டுக்கு சென்று, அங்கிருந்த அனுராதா மற்றும் சசிகலாவை கைது செய்தனர்.
மேலும் அனுராதா வீட்டில் சோதனையிட்ட போது, 10 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது. வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் பணத்தை ஒப்படைத்தனர். பணம் குறித்து அனுராதாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.
போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, ‘கூலிப்படையினருக்கும், பல முக்கிய ரவுடிகளும் அடைக்கலம் கொடுத்த வகையில், ரவுடி துரைசாமி நிறைய சம்பாதித்துள்ளார். அனுராதாவை முறையாக விசாரித்தால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்’ என கூறியுள்ளனர்.

