பரபரப்பான கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.
நேற்று இரவு 16வது ஜபில் இறுதி போட்டி ஹைதராபாத்தில் 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி துவக்கத்தில் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பீல்டிங்கில் சொதப்பியது. இதனால், சுப்மான் கில்-க்கு இரண்டாவது ஓவரிலேயே கேட்சை தீபக் சாஹர் தவற விட்டார். அதன்பிறகு சிக்சரும் பவுண்டரிகளுமாக கில் பறக்க விட்டு அசத்தினார்.
இந்த சூழலில் தோனி தனது வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங்கால் சுப்மன் கில்லின் அதிரடிக்கு தடை போட்டார். இதன்படி 20 பந்துகளில் 39 ரன்கள் அடித்து இருந்த கில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக விருத்திமான் சஹாவுடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சஹா ஒரு பக்கம் அதிரடி காட்ட மறுபக்கம் சாய் சுதர்சன் களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச குஜராத் அணியின் ரன் வேகம் குறையாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
அதிரடி காட்டிக் கொண்டிருந்த இந்த ஜோடியில் சஹா 54 (39) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். தொடர்ந்து சென்னை பந்து வீச்சை சிதறடித்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சாய் சுதர்ஷன் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகளை விளாசினார். அடுத்து களமிறங்கிய ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார்.
முடிவில் ஹர்திக் பாண்ட்யா 21 (12) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டிவான் கான்வே ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 3 பந்துகள் வீசப்பட்ட நிலையில் தீடீரென போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மழை நின்றவுடன் மைதானத்தில் தேங்கி நின்ற தண்ணீரை ஊழியர்கள் வெளியேற்றி, மைதானத்தை தயார் படுத்தினர். இந்நிலையில் ஐ.பி.எல். இறுதிப்போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கியது. மேலும் போட்டி 15 ஒவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக சென்னை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருத்ராஜ், கான்வே அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 6.3 ஓவரில் 74 ரன்கள் சேர்த்தனர்.
ருத்ராஜ் 26 , கான்வே 47 எடுத்து ஆட்டம் இழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ரஹானே 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த சிவம் துபே, அம்பத்தி ராயுடுஅதிரடியாக விளையாடினார்.
ராய்டு 8 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து களம் இறங்கிய தோனி ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
துபேவுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடினார்.
கடைசி ஓவரில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் சிக்ஸரும் ஆறாவது பந்தில் நான்கு ரன்களும் விளாசி சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார்.
இதன் மூலம் 5வது முறையாக சாம்பியன் ஆகி சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணி சாதனையை சமன் செய்தது.
போட்டியின் ஆட்டநாயக கான்வே
தேர்ந்தெடுக்கப்பட்டார்.