

திருச்சி வடக்கு தாரா நல்லூர் வசந்தநகர் ஆண்டாள் இல்லத்தில் வசித்து வருபவர் தியாகராஜன் (வயது 43). இவருக்கு தேவதர்ஷினி(20), முகிலன் (17), பொழிலன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இதில் முகிலன் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி தன்னுடைய வீட்டின் மாடியில் இருந்த விளம்பர பிளக்ஸ் பேனரை கீழே இறக்கும் போது எதிர்பாராத விதமாக வீட்டின் குறுக்கே கடந்து சென்ற மின் கம்பி மீது சாய்ந்துள்ளது. இதில் முகிலன் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.
அவரை தேவதர்ஷினி மற்றும் அவருடைய தாய் இருவரும் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.
இதில் தேவதர்ஷினியின் இரண்டு கைகளும் தீக்காயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் முகிலன் ஒரு கை மற்றும் ஒரு கால் முழுமையாக தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இது குறித்து தியாகராஜன் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க திருச்சியில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர ஃபிளக்ஸ் போர்டுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

