Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது.

0

காதலித்து விட்டு காதலன் கைவிட்டதால், கர்ப்பமடைந்த 17 வயது சிறுமி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்தாள். அதைத் தொடர்ந்து காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி பொன்மலைப்பட்டி கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் அரீஷ் என்ற சூரியபிரகாஷ் (வயது 23). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தார்.

காதலித்த சமயத்தில் அவரை பல்வேறு இடங்களுக்கு சூரியபிரகாஷ் அழைத்து சென்று தனிமையில் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் அந்த சிறுமியிடம் இருந்த காதலை கைவிட்டாராம்.

 

இதற்கிடையே  அச்சிறுமி கர்ப்பம் ஆனாள். நிறைமாத கர்ப்பமாகியும் அதை வெளியே தெரியாமல் மறைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி அச்சிறுமி தனது வீட்டில் உள்ள கழிவறையில் ஆண் குழந்தை பெற்றெடுத்து அங்கே ரத்த போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தாள். பதறிய பெற்றோர் மகள் மற்றும் குழந்தையை மீட்டு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரி டாக்டர்கள் விசாரித்தபோது, சிறுமிக்கு தற்போது 17½ வயது ஆனதும், திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் தரித்ததும் தெரியவந்தது. இது குறித்து பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அஜீம், வாலிபர் சூரியபிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் சூரிய பிரகாசை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.