தாமதமாக வந்த மாணவனை கட்டிவைத்து எட்டி உதைத்த இ.ஆர்.பள்ளி தலைமையாசிரியர். நடவடிக்கை எடுப்பாரா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்.
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை கைகளை கட்டி,முட்டி போடச் சொல்லி எட்டி உதைத்த தலைமையாசிரியர்… உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதி.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வஞ்சகரை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் – நதியா அகியோரின் மகன் ஜீவா (வயது 16).
இவர் திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு வயிற்றுப்போக்கின் காரணமாக பள்ளியின் ஆசிரியரிடம் அனுமதி வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் பள்ளிக்கு தாமதமாக திரும்பியதால் பள்ளியின் தலைமையாசிரியர் அந்த மாணவனின் புத்தகப்பையை ஒளித்து வைத்துவிட்டு தனது அறைக்கு வரச் சொல்லி இருக்கிறார்.
பின்னர் முட்டி போட வைத்து தலைமையாசிரியரும் மற்றும் அலுவலக உதவியாளரும் சேர்ந்து மாணவனின் மார்பில், முதுகில் எட்டி உதைத்து சித்திரவதை செய்திருக்கிறார்.
பின்னர் “உனது புத்தகப்பை உனது வகுப்பறையில் இருக்கு” என்று சொல்லி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
வகுப்பறையிலும் முட்டி போடச் சொல்லி கைகளை கட்டி,முகம் முதுகு,மார்பு பகுதியில் சரமாரியாக அடித்து இருக்கிறார்.
மேலும் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கடுமையான வார்த்தைகளையும் பயன்படுத்தி சக மாணவர்களை தலையில் கொட்ட சொல்லி சித்திரவதை செய்திருக்கிறார்.
வலி தாங்க முடியாமல் மாணவன் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து தனது பெற்றோரிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது கூறித்து கோட்டை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவனை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி அளித்து உள்ளனர். தற்போது மாணவனுக்கு கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாணவனின் தாய் நதியா கூறுகையில்.
ஆசிரியர்கள் என்பவர்கள் குருவுக்கு சமமானவர்கள் மாணவன் தவறு செய்தால் பெற்றோர்களாகிய எங்களை அழைத்து சொல்லியிருக்க வேண்டும்.இது போல மிருகத்தனமான சித்திரவதை செய்த ஆசிரியர்க்கு தக்க தண்டனை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது சம்பந்தமாக கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
பள்ளிகள் திறப்பின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறியிருந்த நிலையில் தாமதமாக வந்த மாணவனை அடித்து சித்ரவதை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.