Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மார்கழி மாதம் ஏன் சிறப்பு வாய்ந்தது…..?

0

மார்கழி ஏன் சிறப்பு வாய்ந்தது? மாதங்களில் நான் மார்கழி.. கிருஷ்ணர் கூறுவது ஏன்?
மார்கழி மாதம் பற்றிய தவறான அபிப்ராயம்..!!
வருடத்தின் அனைத்து நாட்களையும் சுபநாட்கள் என்று சொல்ல முடியாது. எந்த நாளில் சுபக்கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கிறதோ அந்த நாளை சுபநாள் என்று சொல்கிறோம்.

சுபநாள் என்று வருகின்றபோது அது மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடத்துவதற்குரிய நிகழ்வுகளுக்காகவும், சமுதாயத்தில் அனைவரும் கூடி விழாவாக கொண்டாடுவதற்காகவும் சில சுபநாட்கள் இருக்கின்றது. மனிதர்களுக்கு என்று தனியாக இருப்பது போல தெய்வங்களை நினைத்து நன்றி கடன் செலுத்தவும், பிரார்த்தனைகள் வைக்கவும் என்றே சில நாட்கள் இருக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மாதம்தான் மார்கழி மாதம்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பதெல்லாம் கிடையாது. அது தனுர் மாதம். பீடை என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் ஆரோக்கியத்திற்கு உரிய மாதம் மார்கழி மாதம்.

தட்சணாயணம் மார்கழி மாதத்துடன் முடிகிறது. அதாவது, சூரியனுடைய தென் பகுதி இயக்கம் இந்த மாதத்துடன் முடிகிறது. இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்குவதால், நாடி நரம்புகள் வலுவடைகிறது. நீண்ட ஆயுள் கிடைக்கிறது. அதனால்தான் இந்த மாதத்தை இப்படி ஒதுக்கி வைத்தார்கள்.

இம்மாதத்தில் அதிகாலைப்பொழுதில் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான வைப்ரேஷனைக் கொடுக்கும். எனவே இம்மாதம் கெடுதலான மாதம் கிடையாது.

மார்கழியில் திருப்பாவை பாடல்களை பாடி பரந்தாமனின் அருளை பெற்றிடுவோம் வாருங்கள்…!!

சிறப்பு வாய்ந்த திருப்பாவை 30 பாசுரங்களையும் மார்கழி மாதம் பாடினால் இறைவனின் திருவடி தரிசனம் கிடைக்கும்.

மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது மார்கழி மாதம்தான். பீடை மாதம் என்பதன் அர்த்தத்தை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். பீடுடைய மாதம் என்பதே நாளடைவில் மருவி பீடை மாதம் என்றாகிவிட்டது.

பீடுடைய என்றால் செல்வம் பொருந்திய, சிறப்புக்கள் நிரம்பியது என்று அர்த்தம். ‘மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மாவே கூறியிருக்கிறார் என்றால் அதன் சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். மார்கழி மாதம் என்பது தேவர்களது ஒரு நாளின் விடியற்காலை பொழுதாகும். விடியற்காலை என்றாலே மங்களகரமானது தானே? எனவே, இந்த பெருமை பொருந்திய மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, மார்கசீர்ஷம் என்று வட மொழியில் சொல்வர். மார்கம் என்றால் – வழி, சீர்ஷம் என்றால் – உயர்ந்த, வழிகளுக்குள் தலைசிறந்தது என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உகந்த மாதமாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.