வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு
2019-20ம் நிதியாண்டில் தனிநபர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2019-20ம் நிதியாண்டில் தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா கால நெருக்கடியைக் கருத்தில் கொண்டு தனிநபர் வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்வதற்கும், வெளிநாடு மற்றும் குறிப்பிட்ட அளவுடைய உள்ளூர் பரிவர்த்தனை கணக்குகளை தாக்கல் செய்வற்கான அவகாசம் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவான சுயமதிப்பீட்டு வரி செலுத்துபவர்களுக்கான அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.