சாதி வாரிய கணக்கெடுப்பை முறையாக நடத்தி, முத்தரையர் இனத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து முத்தரையர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர் பி. அம்பலத்தரசு தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் இ.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் நிர்வாகிகள் பலரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், சாதிவாரிய கணக்கெடுப்பு முறையாக நடத்த வேண்டும். முக்கியமாக ஏற்கெனவே பயன்பெற்றவர்கள் குறித்த விவரங்களுடன், இதுவரையில் பயன்பெறாதவர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதுடன், முத்தரைய இனத்தில் உட்பிரிவுகளை ஒரு தொகுப்பாக ஏற்படுத்தி, உள் ஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுச்செயலாளர் கே.குப்புசாமி வரவேற்றார். திருச்சி வடக்குமாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.